சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே தன்னுடைய முதல் போட்டியை விளையாடுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். தோனிக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டதால், அடுத்த சீசனில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் தாம் இருக்கும்போதே எதிர்காலத்திற்கான அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தோனி இந்த முடிவு எடுத்திருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளங்கி இருக்கிறார். இதனால் ருதுராஜ், நல்ல தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனினும் இந்த பொறுப்புக்கு ஜடேஜா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனில் கேப்டனாக இருந்த போது சொதப்பியதால் அவருக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது சிஎஸ்கே அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 5 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேக்கு தோனி பெற்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக 226 போட்டிகளில் தோனி விளையாடி இருக்கிறார். இதில் 133 வெற்றி, 91 போட்டிகளில் தோல்வியும் அடங்கும்.
இதனால் ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனில் தோனி சாதாரண வீரராக தான் களத்தில் விளையாடுவார் என தெரிகிறது. இதே போல் தான் 2022ஆம் ஆண்டு சிஎஸ்கே கோட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜடேஜாவை சிஎஸ்கே கேப்டனாக மாற்றியது. தற்போது, அது போல் ஒரு முடிவை சிஎஸ்கே எடுத்துள்ளது.
இதனால், இனி டாஸ் போடும் போது மற்றும் ஆட்டம் முடிந்த உடன் கேப்டனாக தோனி பேசுவதையும் இனி ரசிகர்களால் பார்க்க முடியாது. சிஎஸ்கே அணியில் தோனிக்கு பயிற்சியாளர், மெண்டர் போன்ற முக்கிய பொறுப்பும் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.