சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற மும்பையின் சாதனையை நடப்பாண்டில் தோனியின் சிஎஸ்கே சமன் செய்தது.
தோனி இந்திய அணிக்காக விளையாடினாலும் சரி சிஎஸ்கே அணிக்காக விளையாடினாலும் சரி அவர் களத்தில் எப்போதுமே கோபப்பட்டது இல்லை. இதனால் தோனியை அனைவரும் கூல் கேப்டன் என்று கூறுவது உண்டு.

களத்தில் இடியே விழுந்தாலும் பவுலர்கள் சிக்சர்களாக வாரிக் கொடுத்தாலும் தோனி கோபப்பட மாட்டார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக தோனி கோபப்படுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் தோனி சர்வசாதாரணமாக களத்தில் நடந்திருப்பார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின் தாம் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடிக்க விட்டு சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தேன். அப்போது தோனியின் முகத்தை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. ஆனால் தோனி என்னை ஒன்றுமே சொல்லவில்லை கூலாக பெவிலியன் நோக்கி சென்று விட்டார் என்று கூறினார். ஆனால் அப்படிப்பட்ட தோனிக்கு ஒரு தவறு செய்தால் மட்டுமே பிடிக்காது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தோனி கூல் கேப்டன் தான் ஆனால் அவருக்கு பீல்டிங்கை தவறவிட்டால் நிச்சயமாக பிடிக்காது கடுப்பாகி விடுவார் என்று கூறியுள்ளார். இதனால் வீரர்கள் தோனியின் கீழ் விளையாடும் போது ஃபீல்டிங்கில் கோட்டை விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பீல்டிங் நிற்கும்போது வீரர்கள் தோனியை தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் பீல்டிங் செட் பண்ணும் போது எந்த தடையும் இருக்காது. ஒருவேளை அவரை நாம் பார்க்காமல் நின்று கொண்டிருந்தால் அங்கே தோனி திட்டி விடுவார் என்றும் ஹைடன் கூறி இருக்கிறார்.