சென்னை : ஐந்து முறை ஐபிஎல் கோப்பை மற்றும் இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி தற்போது புதிய கேப்டனாக ருதுராஜை நியமித்துள்ளது. சிஎஸ்கேவுக்காக அனைத்து கோப்பையும் வென்று கொடுத்த தோனி தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக 52 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்கள் குவித்த ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 590 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய டி20 அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்று தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார். இந்த நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ருதுராஜ், தன்னுடைய கருத்தை வெளிப் படுத்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கின்றேன். ஆனால் அதைவிட எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. எனினும் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஏனென்றால் எங்களது அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர்.
இதனால் நான் பெரிய விஷயங்களை செய்ய தேவையில்லை. அது மட்டுமல்லாமல் எங்கள் அணியில் தோனி இருக்கிறார். ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் என்னை நிச்சயமாக வழி நடத்துவார்கள். இதனால் நான் எதை நினைத்தும் கவலைப்படவில்லை.
இந்த பொறுப்பை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புகிறேன் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இதுபோல் கேப்டன் மாற்றப்பட்டபோது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் சிஎஸ்கே, தோனி ஆகியோர் தெளிவாக உள்ளனர்.