சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் உலகத்தரம் வாய்ந்த வீரராக இருப்பதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டாரல் மிட்செல் பாராட்டி இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 138 ரன்கள் என்ற இலக்கை தொடங்கியது.
அப்போது ஆடுகளம் மிகவும் தூய்மையாக மாறியதால் சிஎஸ்கே அணி வீரர்கள் தடுமாறினர். எனினும் நியூசிலாந்து வீரர் டேரல் மிச்சல் மற்றும் கேப்டன் ருதுராஜ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதில் டாரல் மிட்செல் 19 பந்துகளை எதிர் கொண்டு 25 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கேப்டன் ருதுராஜ் 58 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் அடக்காமல் இருந்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும். இந்த நிலையில் செய்தியாளருடன் பேசிய டேரல் மிட்செல், சென்னை மக்கள் முன் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயம் ஸ்பெஷலானவர்கள். ஆடுகளம் தோய்வாக இருக்கிறது என்று தெரிந்தாலே நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். அதனை தான் நாங்கள் இன்று செய்தோம். ருதுராஜ் உலக தரம் வாய்ந்த வீரராக என் கண்களுக்குத் தெரிகிறார்.
என்னைப் பொருத்தவரை எதிரணி வீரர்களை நெருக்கடி ஏற்படுத்த திட்டங்களை தீட்டி கொண்டு வர வேண்டும். அதனை ருதுராஜ் சிறப்பாக செய்தார் என்று நினைக்கின்றேன். இன்றைய ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனது. பந்தும் நன்றாக திரும்பியது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட நினைத்தோம்.
நாங்கள் இருவருமே கடைசி வரை நின்று வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். பேட்டிங் வரிசையில் எனக்கு எந்த இடத்தில் கொடுத்தாலும் பரவாயில்லை. நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. நான் இங்கு என்னுடைய அணிக்கு வெற்றியை பெற்று தர தான் வந்திருக்கிறேன். அதை செய்வதற்கு நான் முயல்கின்றேன் என்று டேரல் மிட்செல் கூறியுள்ளார்.