சென்னை : ஐபில் 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் விளையாடி 590 ரன்களை குவித்தார். 147 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் மிரட்டலாக இருந்தது.
அப்போது வெற்றி கொண்டாட்டத்தில் சிஎஸ்கே அணி இருந்தபோது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, கூறிய வார்த்தைகள் தான் இது. தமிழ்நாட்டு மக்களுக்கு எப்போதும் கெய்க்வாட் என்பவரை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பட்டியலில் நீங்களும் இடம்பெறப் போகிறீர்கள் என்று கூறினார்.

அவர் சொன்ன கெய்க்வாட் வேறு யாரும் அல்ல சிவாஜி கெய்க்வாட் என்று அழைக்கப்படும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தமிழ்நாட்டு மக்களின் ரசனையில், உடல் மொழியில், பேச்சில் என அனைத்திலும் கலந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய இயற்பெயர் சிவாஜி கெய்க்வாட். இந்த நிலையில் அதே கெய்க்வாட் என்ற பெயரை வைத்திருக்கும் ருதுராஜ் தமிழக மக்களின் அபிமான நபராக மாற வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் ருதுராஜ் கேப்டனாக இருப்பது இது முதல் முறை அல்ல. அவர் ஏற்கனவே மகாராஷ்டிரா அணிக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டி20 அணிக்கும் கேப்டனாக இருந்து தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தவர். மேலும் இளம் வீரராக இருக்கும் போதே அவர் சிஎஸ்கே அணிக்காக ஆரஞ்சு நிற தொப்பியை வென்று கொடுத்திருக்கிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்ளைக் கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் சமன் செய்திருக்கிறார். இப்படி பல திறமைகள் ருதுராஜிடம் இருக்கிறது. எப்படி இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, சிஎஸ்கேவுக்கு கேப்டனாக மாறிய போது தமிழக ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறினார். தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளை என்று தோனியை மக்கள் அழைக்க தொடங்கி விட்டார்கள்.
தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் அதே போல் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தால் நிச்சயம் ருதுராஜையும் தமிழக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஏற்கனவே தன்னுடைய திருமணத்தின் போது ருதுராஜ் தமிழ் முறைப்படி தான் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சிஎஸ்கே அணி தமது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது என்று பலமுறை கூறியிருக்கிறார். அவர் சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தால் நிச்சயம் சிவாஜி கெய்க்வாட்டுக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட்டும் தமிழக மக்களிடையே ஒரு அங்கமாக மாறிவிடுவார்.