சென்னை : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சொந்த மைதானத்தில் கூட அணியை சரியாக தேர்வு செய்ய முடியவில்லை என புலம்பி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. பெரிய அளவில் ஸ்கோர் குவித்ததால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என நினைத்த நிலையில், இரண்டாம் பாதியில் பந்து வீச கடினமாக இருந்தது. ஆறு பந்துவீச்சாளர்கள் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால், லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது. மேலும், கடைசி 5 ஓவர்களில் அதிக ரன் கொடுத்து தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டீபன் பிளெம்மிங் சேப்பாக்கத்தில் நடந்த முந்தைய மூன்று போட்டிகள் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடந்ததாகவும், ஆனால், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கூறினார்.
சொந்த மைதானத்தின் சூழ்நிலைகளை கூட சரியாக கணித்து அணியை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் கூறினார். இது பற்றி பிளெம்மிங் அளித்த பேட்டி - "முதலில் ஒரு பிட்ச் இருந்தது, அது ஸ்பின் பந்துவீச்சில் பந்து நன்றாக திரும்பியது. அதை வைத்து நாங்கள் வென்றோம். ஆனால், இந்த பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. பிட்ச்சுக்கும், எங்களின் திட்டத்துக்கும் நல்ல ஒற்றுமை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இது சொந்த மைதானம். இங்கே சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். ஸ்கோரை தற்காத்து வெற்றி பெற வேண்டும். எனவே, இது சரியாக அமையாத போது வெற்றி பெறுவது மிகவும் கடினம். எங்களுக்கு அணி சரியாக அமையவில்லை" என்றார்.