மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருமாறு பிசிசிஐ அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் வரும் 2024 டி20 உலக கோப்பை தொடருடன் நிறைவடைகிறது. ஒப்பந்தம் நிறைவு பெறுவதால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பிசிசிஐ விண்ணப்பங்கள் பெற முடிவு செய்துள்ளது. இதற்கு ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் பயிற்சியாளராக விண்ணப்பிக்க விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ சார்பில் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை. அவர் இதுவரை சிஎஸ்கே நிர்வாகத்திடம் இது குறித்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது அவர் சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு உள்ளூர் டி20 அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறார். சிஎஸ்கே அணியின் சகோதர அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு ஸ்டீபன் பிளெம்மிங் பயிற்சியாளராக இருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஹண்ட்ரட் தொடரில் "சதர்ன் பிரேவ்" அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இந்த ஆண்டு ஏதேனும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
எனவே இத்தனை வாய்ப்புகளை விட்டுவிட்டு இந்திய அணியுடன் அவர் இணைவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தால் ஒரு வருடத்தில் ஐபிஎல் நடக்கும் இரண்டு மாதங்கள் தவிர மற்ற பத்து மாதங்களும் இந்திய அணியுடன் பயணிக்க வேண்டும். எனவே, ஸ்டீபன் பிளெம்மிங் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது
ஸ்டீபன் பிளெம்மிங் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் அந்த அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.