சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இந்த தொடரில் முதல் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில் வியாழக்கிழமை மாலை தோனி ஒரு டிவிஸ்ட் கொடுத்திருந்தார்.
புதிய கேப்டனாக தற்போது ருதுராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து சிஎஸ்கே பயிற்சி சொன்ன கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் போது தோனி திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அப்போது நாங்கள் வேறு கேப்டனை வைத்து விளையாட தயாராக இல்லை. திடீரென்று தோனி மாறியதால் புதிய கேப்டன் செட் ஆவதற்கும் கொஞ்சம் நேரம் ஆனது. ஆனால் இம்முறை நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை தயார் செய்ய விரும்புகிறோம்.
தோனி இம்முறை கேப்டன் பதவி விட்டு செல்வார் என்று எனக்கு முன்பே தெரியும். தோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணி தோய்வடைய வாய்ப்பு இருக்கும். இதனால் தான் தோனி இருக்கும்போதே ஒரு கேப்டனை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். நாங்கள் இளைஞர்கள் மீது வைத்த நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை. ருதுராஜ் உடன் நான் ஏற்கனவே கேப்டன்ஷிப் குறித்து பேசி இருக்கிறேன்.
இது அவருக்கு கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன்.எம் எஸ் தோனி பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவருடைய உடல் தகுதி சிறப்பாக இருக்கிறது. கடந்த சீசனில் தோனியின் உடல் தகுதி பிரச்சினையாக இருந்தது. தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வந்திருக்கிறார். இம்முறை அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் சிறந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.