சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து நட்சத்திர அணியான ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் ஓராண்டுக்கு பின் தோனியை மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் காண ஆர்வமாக உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் விண்டேஜ் ஹேர்ஸ்டைலில் தோனி களமிறங்கவுள்ளதால், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டை போல் நேரடியாக அல்லாமல், உலகக்கோப்பை தொடர் போல் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பேடிஎம் இன்சைடர் செயலி மற்றும் சிஎஸ்கே அணியின் இணைய பக்கத்தில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 38 ஆயிரம் ரசிகர்கள் அமரும் மைதானத்தில், 18 இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் மார்ச் 18ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் குவிந்ததால், ரசிகர்கள் பலராலும் உடனடியாக டிக்கெட்டுகளை பெற முடியவில்லை. இதன்பின் ஒரு வழியாக டிக்கெட் விற்பனை பக்கத்திற்குள் சென்று பார்த்தால், 10 நிமிடங்களில் அனைத்து விக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகக்கோப்பை தொடரில் எப்படி டிக்கெட் விற்பனை என்ற பெயரில் பிசிசிஐ மாய வேலைகளை செய்ததோ, அதேபோன்று சிஎஸ்கே அணி நிர்வாகமும் டிக்கெட் விற்பனை என்று பெயருக்கு அறிவித்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.