பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்று முடிவிலே வெளியேறி இருக்கின்றது. பெங்களூருவில் நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்கள் எடுத்திருந்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் சென்றிருக்கலாம்.
ஆனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறுகிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெங்களூரு அணி ரசிகர்களும் சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு ஆர்சிபி ரசிகர்கள் எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர் என்று பல்வேறு சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகார் அளித்திருந்தார்கள். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க சிஎஸ்கே ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதாவது ஆர்சிபி அணி தற்போது எலிமினேட்டர் போட்டியில் வரும் புதன்கிழமை அஹமதாபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஒரு வேளை ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் குவாலிஃபையர் போட்டியில் விளையாட சென்னை தான் வரவேண்டும். வெள்ளிக்கிழமை ஆர்சிபி சென்னையில் விளையாடினால் அப்போது தகுந்த வரவேற்பு கொடுக்கப்படும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சிஎஸ்கே அணியை கடுமையாக ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்து பெங்களூர் மைதானத்தில் சீன் போட்டார்கள். அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க சிஎஸ்கே ரசிகர்கள் தயாராக வருகின்றனர். இந்த சூழலில் ஒருவேளை ஆர்சிபி அணி குவாலிஃபையர் 2க்கு தகுதி பெற்று சென்னை வந்தால் அப்போது கோலி அவருக்கு எதிரான ரசிகர்களை சந்திக்க நேரிடும். இது விராட் கோலிக்கு நிச்சயம் புது அனுபவமாக இருக்கும். ஆர்சிபி யும் அவர்களது ரசிகர்களும் தவறான இடத்தில் கை வைத்து விட்டதாகவும், இதற்கு நிச்சயம் அனுபவிக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.