சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பந்துவீச்சில் முக்கிய காரணமாக இலங்கை அணியின் பதிராணா இருந்தார். அவர் 12 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு பதிராணாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்த தொடரின் முதல் சில போட்டிகளில் பதிராணா பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நினைத்ததை விட பதிராணா உடல் தகுதியை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமிற்கு வந்து சேர்ந்துள்ள பதிராணா, தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பதிராணா பங்கேற்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சிஎஸ்கே அணி எப்போதுமே நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து விளையாடும். ஆனால் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்து விளையாடுகிறது. ரச்சின் ரவீந்திரா டாரன் மிட்செல், முஸ்தஃபீஸுர் ரஹ்மான் என மூன்று வெளிநாட்டு வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
மேலும் பதிராணாவின் பெயர் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் பதிரானா இம்பேக்ட் வீரராக பவுலிங்கில் களமிறங்க கூடும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் சிஎஸ்கே விளையாடி முதல் போட்டியில் அப்படி எந்த ஒரு தாக்கமும் ஏற்படவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சை நம்பி சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிராணா மற்றும் முஸ்தஃபிசு ர் ரஹ்மான் ஆகியோரை வைத்து சிஎஸ்கே அணி பவுலிங் கட்டமைக்கலாம் என தெரிகிறது. எப்படி மும்பை இந்தியன்ஸ் அணி டிரண்ட் பவுல்ட் மற்றும் பும்ராவை வைத்து ஓவர்களை வீசுவார்களோ அதே போல் ஒரு திட்டத்தை சிஎஸ்கே அணி செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறது. சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை ரச்சின் ரவீந்திராவும் ஜடேஜாவும் இருக்கிறார்கள். ஒருவேளை இன்றைய ஆடுகளும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் பதிரானாவுக்கு பதில் தீக்சனா அல்லது மோயின் அலி பந்து வீச வரலாம்.