சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த 14 கோடி ரூபாய் வீரர் டேரல் மிட்செல், முதல் முறையாக அரை சதம் அடித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சிஎஸ்கே அணி எப்போதுமே பெரிய தொகை கொடுத்து வீரர்களை வாங்க யோசிக்கும்.
ஆனால் நடந்து முடிந்த 2023 உலக கோப்பையில் டேரல் மிட்செல் சிறப்பாக விளையாடியதை பார்த்து சிஎஸ்கே அணி அவரை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் டேரல் மிட்செல் அவருக்கு நல்ல மாற்றுவீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டேரல் மிட்செல், தமக்கு கிடைத்த சம்பளத்திற்கு ஏற்ப சரியான ஆட்டத்தை விளையாடவில்லை. ஆர்சிபிக்கு எதிராக 22 ரன்கள்,குஜராத்துக்கு எதிராக 24 ரன்கள்,டெல்லிக்கு எதிராக 34 ரன்கள், சன்ரைசஸ்க்கு எதிராக 13 ரன்கள், கே கே ஆர் க்கு எதிராக 25 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் எதிராக 17 ரன்கள், லக்னோக்கு எதிராக 11 ரன்கள் என டேரல் மிட்செல் தடுமாறி வந்தார்.
இதனால் மிட்செலை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். எனினும் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 46வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. ரஹானே 9 ரன்கள் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரல் மிட்செல், ருதுராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதலில் கொஞ்சம் பொறுமை காத்த டேரல் மிட்செல், பிறகு அதிரடியை காட்டினார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். தன்னுடைய ரன்குவிக்கும் வேகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என நினைத்த மிட்செல், பெரிய ஷார்ட் ஆட முற்பட்டார்.அப்போது அது சிக்ஸர் லைனில் இருந்த வீரரிடம் கேட்ச் ஆனது. தற்போது தான் பார்முக்கு திரும்பிய மிட்செல், அரை சதத்தை சதமாக மாற்றும் உத்வேகத்தில் இருந்தார். ஆனால் அவர் திடீரென்று ஆட்டம் மணந்ததால் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி சென்றார்.