சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை செவ்வாய்க்கிழமை லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.
ஐபிஎல் புள்ளி பட்டியல் தற்போது சிஎஸ்கே அணி 7 போட்டிகள் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி மூன்று போட்டிகளில் தோல்வி என எட்டு புள்ளிகள் உடன் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

லக்னோவில் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ அணி 19 ஓவர் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதனால் லக்னோ அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் சிஎஸ்கே இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் நான்கு ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
இதனால் நாளைய ஆட்டத்தில் முஸ்தஃபீசுர் ரகுமான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட்ஸ் கிளீசென் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மோயின் அலி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் தான் வீசினார். அதில் ஐந்து ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைய ஆட்டம் நடைபெறுவதால் மோயின் அலியின் பங்கு மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா கடந்த சில போட்டிகளாக தடுமாறி வருகிறார். இதனால் அவருக்கும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது. சிஎஸ்கே அணி பிளே ஆப் தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் சென்னையில் நடைபெறும் நான்கு போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.