சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்றைய ஆட்டத்தில் ஒரு மாபெரும் மைல்கல்லை தொட இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இதுவரை 244 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு சேரும். இந்த நிலையில் தற்போது கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதால் தோனி வெறும் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராகத் தான் களமிறங்க போகிறார்.

இதன் காரணமாக இம்முறை தோனி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த முறை காயம் காரணமாக தோனி பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. விளையாடிய சில பந்துகளில் ஒரு கேமியோ ஆடிவிட்டு சென்றார். ஆனால் இம்முறை அறுவை சிகிச்சை எல்லாம் மேற்கொண்டு தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு தோனி களத்திற்கு திரும்புகிறார்.
இதனால் இம்முறை வான வேடிக்கை காட்டுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தோனி ஒரு சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி இதுவரை 4957 ரன்கள் அடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தோனி இன்றைய ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணிக்காக 5,000 ரன்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதற்கு முன்பு இந்த பெருமையைப் பெற்றவர், சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா தான். ரெய்னா 200 போட்டிகளில் விளையாடி 5529 ரன்கள் அடித்திருக்கிறார். தோனி 244 போட்டிகளில் விளையாடி 4957 ரன்கள் சேர்த்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் டுபிளசிஸ் 100 போட்டிகளில் விளையாடி 2932 ரன்கள் எடுத்திருக்கிறார். நான்காவது இடத்தில் ஹசி 64 போட்டிகளில் விளையாடி 2213 ரன்களும், தமிழக வீரர் முரளி விஜய் 89 போட்டிகளில் விளையாடி 2205 ரன்களும் சேர்த்து இருக்கிறார்.
ஆறாவது இடத்தில் ராயுடு, 90 போட்டியில் விளையாடிய 1932 ரன்களும் தற்போதைய கேப்டன் ருதுராஜ் 52 போட்டியில் விளையாடி 1792 பேரும் சேர்த்து இருக்கிறார். இந்த நிலையில் ரெய்னாவை முந்த வேண்டுமென்றால் தோனி இந்த தொடரில் 572 ரன்கள் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் அவர் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று பெருமையை பெறுவார்.