சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அபாரமாக பாய்ந்து கேட்சை பிடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் 46 ரன்களும், அதிரடி தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திராவும் 20 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

நடுவரிசையில் களம் இறங்கிய சிவம் துபே 23 பந்துகளின் 51 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். சி எஸ் கே எடுத்தது பெரிய ஸ்கோர் என்றாலும் இரவு நேரம் என்பதால் பனிப்பொழிவு இருக்கும்.
இதன் காரணமாக பௌலர்கள் பந்து வீச கடினமாக சூழல் நிலவும். இதனால் ஆட்டத்தில் ஒவ்வொரு பந்தும் மிகவும் முக்கியமாக இருந்தது. கிரிக்கெட்டை எப்போதுமே கேட்சஸ் வின் மேட்ச்சஸ் என்று சொல்வார்கள். அதாவது கேட்சை பிடித்தால் அது ஆட்டத்தையே வெல்லும் வாய்ப்பை ஏற்படும் என்பதுதான்.
அந்த வகையில் 42 வயதான தோனி இன்று பிடித்த ஒரு கேட்ச் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் அணியின் கேப்டன் கில் எட்டு ரன்களிலும் விதர்மன் சாகா 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இருவருமே தமிழக வீரர்கள் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கங்கள் தெரியும். இதனால் இவர்களது விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் இன்று பந்து வீசினார். அப்போது விஜய் சங்கர் அடித்த பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது.
அங்கு ஸ்லிப்பில் யாரும் இல்லை. இந்த நிலையில் 42 வயதான தோனி திடீரென்று பாய்ந்து அந்த கேச்சை அபாரமாக பிடித்தார். இதனை பார்த்தவுடன் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். எப்படி படையப்பா படத்தில் அப்பாஸ், ரஜினியை பார்த்து உங்களுக்கு வயசே ஆகல என்று சொல்வாரோ! அதேபோல் ரசிகர்களும் தோனியை கொண்டாடி வருகின்றனர். இந்த வயதிலும் தோனி சிஎஸ்கே அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் இப்படி பாடுபடுவது மெய்சிலிர்க்க வைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.