சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது.
தொடர்ந்து இரண்டு போட்டியில் தோல்வியை தழுவி இருக்கும் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகள் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக கருதப்பட்ட பதிராணா காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும் சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் மூன்று மாற்றங்களை செய்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார். டாஸ் வென்ற ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி அவர் சென்னையில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கிறது.
நேற்று நாங்கள் பயிற்சி செய்யும்போது கூட பனிப்பொழிவு இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் டாஸ் வென்று பந்துவீச போகிறோம். தொடர்ந்து இரண்டு தோல்வியை தழுவி இருப்பதால் எங்களுடைய நம்பிக்கை ஒன்றும் குறையவில்லை. ஏனென்றால் நாங்கள் அடைந்த தோல்வி பெரிய அளவில் இல்லை. சில போட்டிகளில் நாங்கள் சிறிய ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவினோம்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். கேகேஆர் அணி புதுவிதமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். அவர்கள் பயமின்றி ரன்களை குவிக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் அணி குறித்து தான் கவனம் செலுத்துகிறோம். சிறிய விஷயங்களை சரியாக செய்தாலே நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ஆட்டத்தில் பதிரானா விளையாடவில்லை. இதைப்போன்று தீபக்சாகருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் திரும்பி இருக்கிறார். வங்கதேச வீரர் முஸ்தஃபீர் ரஹ்மான் மற்றும் உத்திரபிரதேச வீரர் சமீர் ரிஸ்வி ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
டாசை இழந்தது குறித்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ், இன்றைய ஆட்டத்தில் நாங்களும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம்.நாங்கள் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அதைப்பற்றி இப்போது யோசிப்பதில்லை. அதையெல்லாம் வரலாறாக மாறிவிட்டது. தற்போது புதிய ஆட்டமாக தான் இதை பார்க்கிறோம். நாங்கள் எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.