சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்போது ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கும் சிஎஸ்கே அணி இம்முறை மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் 42 வயதான தோனி தன்னுடைய கடைசி கிரிக்கெட் போட்டியில் இந்தத் தொடரில் விளையாடுவார் என்பதால் அவரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே ஆர்சிபி அணிக்கு இடையிலான போட்டியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எடுத்துள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதில் குறைந்தபட்சம் டிக்கெட் ஆக 1700 ரூபாயும், அதிகபட்ச டிக்கெட் விலையாக 7500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பேடிஎம் இன்சைடர் ஆப்பில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் புதியதாக ஆன்லைன் வரிசை என்று ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது 38 ஆயிரம் இருக்கைக்கான டிக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் டிக்கெட் பெறுவதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும்போது, அவர்களை வரிசைப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது எப்படி நாம் டிக்கெட் வாங்க கவுண்டரில் வரிசையில் நிற்போமோ, அதே போல் ஆன்லைனில் வரிசைப்படுத்தப்படுகிறது.
இதில் பொறுமை இழந்து சிலர் அந்த இணைய பக்கத்தை விட்டு வெளியேறினால், நீங்கள் வரிசையில் முன்னேறி செல்வீர்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நாம் ரயில் டிக்கெட்டில் புக் செய்யும்போது எப்படி நமக்கு வெயிட்டிங் லிஸ்ட் இருக்கிறதோ அதை போல் இங்கு டிக்கெட் புக் செய்வதற்கே ஒரு ஆன்லைன் வரிசை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதில் தற்போது என்ன சிக்கல் என்றால் இந்த வரிசை குறைந்து டிக்கெட் புக் செய்யும் நேரத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதனை தேர்வு செய்து புக் செய்தால் Error மெசேஜ் காட்டுவதாக கூறப்படுகிறது.இது குறித்து விளக்கம் அளித்துள்ள பேடிஎம் நிறுவனம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் புக் செய்ய முயற்சி செய்வதால் இதுபோல் ஆகிறது.
இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் ஒரே மொபைலில் டிக்கெட்டுகளை வாங்க முயற்சி செய்யாமல் ஒரே நேரத்தில் நான்கு விதமான மொபைல் அல்லது லேப்டாப்புக்களில் அமர்ந்து டிக்கெட்டுகளை வாங்க முயற்சி செய்தால் கிடைப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்காக சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.