மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஐந்தில் வெற்றி ஐந்தில் தோல்வி என 10 புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி இருக்கிறது.
இனிவரும் நான்கு போட்டிகளில் சிஎஸ்கே அணி மூன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றால் கூட இம்முறை கோப்பையை வெல்வது கடினம். இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற சீசன்களை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொண்டால், ஒரு விஷயம் உங்களுக்கு தெரிய வரும். சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்ற போதெல்லாம் அவர்களுடைய பிளேயிங் லெவன் செட்டிலாக இருந்திருக்கும். எந்தெந்த இடத்தில் எந்தெந்த வீரர்கள் விளையாடுகிறார்கள் என்ற தெளிவு இருக்கும். அது மட்டும் இல்லாமல் அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பார்கள்.
ஆனால் இம்முறை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இன்னும் தெளிவாக செட் ஆகவில்லை. பத்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடக்க வீரராக ரகானே களமிறங்கி வருவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தருகிறது. ரஹானே தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் அவரை அந்த இடத்தை விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதை போன்று டேரல் மிட்செல் ஒரு போட்டியில் மூன்றாவது இடத்திலும் மற்றொரு போட்டியில் ஆறாவது இடத்திலும் மாற்றி மாற்றி களமிறங்கி வருகிறார். இதனால் அவருடைய இடம் அணியில் என்ன என்பது தெளிவாகவில்லை. இதேபோன்று முதல் சில போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த மோயின் அலி, திடீரென்று அணிக்குள் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக மோயின் அலி, நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்குவார். ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோயின் அலி கீழ் வரிசையில் இறங்கினார். இதனால் அவருடைய இடமும் இன்னும் செட்டாகவில்லை. இதுபோன்று ஜடேஜா, ரகானே ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.இருவரும் கடந்த சீசனில் விளையாடியதில் 10% கூட இம்முறை சரியாக செயல்படவில்லை.
மேலும் சிஎஸ்கே அணியில் டாப் பவுலர்கள் காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற காரணங்களால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதே கடினம். அப்படி சென்றாலும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது. இதனால் தோனி வெறும் கையோடு தான் ஐபிஎல் தொடரை விட்டு செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.