சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு முதல் இடம் பெற்று இருக்கும் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தோனி அவரை சிஎஸ்கே அணியில் முக்கிய இடத்தில் பயன்படுத்த பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய வீரருமான தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற இருக்கிறார். அவர் அணியை விட்டு சென்றால் மூன்று முக்கிய விஷயங்களில் சிஎஸ்கே அணிக்கு பாதிப்பு ஏற்படும்.

அதில் முக்கியமானது கேப்டன் பதவி. அதற்கு முன்னெச்சரிக்கையாக தன்னைப் போன்றே அமைதியான குணம் கொண்ட ஆழமாக சிந்திக்கக் கூடிய ருதுராஜ் கெய்க்வாட்டை தோனி தேர்வு செய்து இருக்கிறார். அதை தவிர்த்து பார்த்தால் இன்னும் இரண்டு விஷயங்களில் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் உள்ளது. ஒன்று விக்கெட் கீப்பர் பதவி. நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே அடுத்த ஆண்டு அணிக்கு திரும்பினால் அந்த பிரச்சனை தீர்ந்து விடும்.
மற்றொரு சிக்கல், தோனியைப் போல ஏழு அல்லது எட்டாவது வரிசையில் இறங்கி போட்டியை ஃபினிஷிங் செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேண்டும். அந்த ஃபினிஷர் பணியை செய்ய ஒரு இளம் வீரரை தோனி தேர்வு செய்து இருக்கிறார். அவர்தான் சமீர் ரிஸ்வி. அவருக்கு தோனி தனிப்பட்ட முறையில் பேட்டிங் பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.
பல முறை வலைப் பயிற்சியின் போது அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. குறிப்பாக கடைசி நேரத்தில் எந்த பந்தையும் சிக்ஸருக்கு விரட்டுவது எப்படி என்பது குறித்து தோனி அவருக்கு ஆலோசனைகள் கூறி வருகிறார். இந்த ஆண்டு இதுவரை ஆடிய போட்டிகளில் சமீர் ரிஸ்வி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் அவர் எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என தோனி நம்புகிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். அப்போது ஏலத்திற்கு முன் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தாலும் மறுபடியும் ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் மீது தோனி நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.