சென்னை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரருமான தோனி சமூக வலை தளங்களில் தனது அனுபவத்தை குறித்து வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். துபாய் 103.8 என்ற யூட்யூப் சேனலுக்கு தோனி பேட்டி அளித்தார். அதில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
"நான் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமையே விரும்புகிறேன். உண்மையில் ட்விட்டரில் எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை என நான் நம்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் யாராவது எதையாவது எழுதினால், அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடுகிறது. அங்கே எப்போதும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது. நான் ஏன் அங்கே இருக்க வேண்டும்? அதில் 140 எழுத்துக்களை தான் எழுத முடியும். விரிவாக எழுத முடியாது. நான் அதில் ஏதாவது எழுதினால் அதை மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படித்து புரிந்து கொள்கிறார்கள். எனவே, அது எனக்கான இடம் இல்லை என்று எனக்கு தோன்றியது என்றார்."

மேலும், "இன்ஸ்டாகிராமை நான் எப்போதும் விரும்புகிறேன். அங்கே நான் ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையோ பகிர்ந்து விட்டு அப்படியே விட்டு விடுவேன். ஆனால், அதுவும் இப்போது மாறிக் கொண்டு இருக்கிறது. எனினும், நான் இன்ஸ்டாகிராமை தான் தேர்வு செய்வேன். ஆனால், அதில் நான் தொடர்ந்து பதிவுகளை வெளியிடவில்லை. ஏனெனில், கவனச் சிதறல் குறைவாக இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். இடையே அவ்வப்போது ரசிகர்களுக்காக சில பதிவுகளை வெளியிடுவேன். நான் இப்போது எங்கே இருக்கிறேன், நல்ல நிலையில், நல்லவர்களிடம் நான் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவேன்" என்றார் தோனி.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பங்கேற்ற தோனி, சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.