சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. கேப்டனாக தோனி களமிறங்கி ஆறாவது முறையாக கோப்பையை வென்று கொடுப்பார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால் முதல் போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரராக தோனிக்கு பிறகு ஜடேஜா தான் இருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனின் போது கூட தோனி திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ஜடேஜா, புதிய கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் கடந்த சீசனின் போது கூட ஜடேஜாவின் அபார ஆட்டதால் தான் சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றியை பெற்றது. இதனால் ஜடேஜாவுக்கு தான் இம்முறை கேப்டன் பதவி வழங்கப்படும் என்று நம்பப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ருதுராஜ்க்கு கேப்டன் வாய்ப்பு வந்து சேர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஜடேஜா ஏற்கனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து கடுமையாக தடுமாறினார். மேலும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் கேப்டனாகவே செயல்பட்டது கிடையாது.
தற்போது ஜடஜாவுக்கு 35 வயது ஆகிவிட்டது. இன்னும் அவரால் மூன்று ஆண்டுகள் விளையாட முடியும். அதன் பிறகு மீண்டும் புதிய கேப்டனை தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த நிலையில் ருதுராஜ்க்கு 27 வயது தான் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட தொடர்களில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.
சில வீரர்கள் கேப்டன் பதவியை ஏற்றால் அவருடைய பேட்டிங் அல்லது பந்துவீச்சு பாதிக்கப்படும். ஆனால் ருதுராஜ் கேப்டனாக இருந்து தான் ஒரே தொடரில் அடுத்தடுத்து நான்கு சதங்களை மகாராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளாசி இருக்கிறார். சிஎஸ்கே நிகழ்காலத்தை குறித்து யோசிக்காமல் தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அணியை எப்படி வலுவாக்க வேண்டும் என்பது குறித்து யோசித்து இருக்கிறது.
இதனால் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக அவர் 52 போட்டிகளில் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணி செயல்படும் முறை பழக்கவழக்கங்கள் எல்லாம் அவருக்கு நிச்சயம் தெரியும். அது மட்டுமில்லாமல் தோனி களத்தில் இருந்து ருதுராஜ் இந்த சீசனில் பாடம் சொல்லிக் கொடுப்பார். இதன் மூலம் அடுத்த அடுத்த சீசன் எல்லாம் ருதுராஜ் சுயமாகவே கேப்டனாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.