சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடர் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் கோப்பையை தக்க வைத்துக்கொள்ள சிஎஸ்கே அணி கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.
வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் பயிற்சி முகாம் நடத்தவும் சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட சிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவருடைய காயத்தின் தன்மை என்னவென்று தெரியவில்லை.

இதனால் அவர் சிஎஸ்கே அணியின் சில போட்டிகளில் விளையாடாமல் போகலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிவம் துபேவை வைத்துக் கொள்ளலாமா? இல்லை மாற்று வீரரை தேர்வு செய்யலாமா என சிஎஸ்கே யோசித்து வருகிறது. மேலும் சிவம் துபே வந்தால் கூட வேறு ஏதேனும் வீரர் காயமடைந்தால் அவருக்கு மாற்றாக ஒரு வீரர் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎஸ்கே சில காய்களை நகர்த்தி வருகிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்பராஸ்கான் விலை போகவில்லை. இந்த நிலையில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாடிய விதத்தை பார்த்து அவரை தங்களது அணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என பலர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக கம்பீர் சர்பராஸ் கானை, கே கே ஆர் அணிக்கு கொண்டு வர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் சிஎஸ்கேவும் சர்பராஸ் கானை தங்களது அணிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் இதில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. சர்பராஸ்கான் ஒரு நல்ல வீரர் என்றாலும் அவருக்கு பந்து வீசத் தெரியாது. ஆனால் சர்பராஸ் கான் தம்பியான முசிர்கான் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலுமே ஜொலித்திருக்கிறார்.
மேலும் முசீர் கானின் பந்துவீச்சு சென்னை ஆடுகளத்திற்கு மிகவும் ஏற்ற வகையில் இருக்கும். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முசீர் கானை எப்படியாவது சிஎஸ்கே அணிக்கு கொண்டு வாருங்கள் என தோனி கூறி இருக்கிறார். முசீர் கானை எந்த ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் சர்பராஸ்க்கு பதில் தோனி அவருடைய தம்பி முஷீர் கானுக்கு வலை விரித்து இருக்கிறார்.