சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது மிகவும் சிக்கலாக மாறி உள்ளது.
சிஎஸ்கே அணி தற்போது 2024 ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் ஆடி அதில் 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு மேலே இருக்கும் நான்கு அணிகளும் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

எனவே சிஎஸ்கே அணி தனக்கு மீதம் இருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை சிஎஸ்கே அணி மீதம் இருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டும் வென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்தே பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை பெற முடியும்.
ஆனால், தற்போது உள்ள நிலையில் சிஎஸ்கே அணி நான்கில் மூன்று போட்டிகளில் வெல்வதும் கூட கடினமான ஒன்றுதான். அதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் நால்வர் விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என்பது தான்.
முதலில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். அவர் இதுவரை சிஎஸ்கே அணிக்கு மிக சிறப்பாக பந்து வீசி முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். அடுத்ததாக பவர் பிளேவில் பந்து வீசும் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
அடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான பாஸ்போர்ட் பெறுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.
மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடவில்லை. அவர் அடுத்த போட்டிக்கு முன் முழு உடல் தகுதி பெறுவாரா என்ற கேள்வியும் உள்ளது. இந்த நால்வரில் இருவர் முற்றிலுமாக ஆட முடியாத நிலையில் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் பந்து வீச்சில் சிஎஸ்கே அணி பலவீனம் அடைந்துள்ளது. ஏற்கனவே பேட்டிங்கில் அதிரடியாக ஆட முடியாமல் சிஎஸ்கே அணியின் ஜடேஜா, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ரஹானே போன்ற வீரர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் பந்து வீச்சும் பலவீனமாக மாறி உள்ளது. எனவே சிஎஸ்கே அணி அடுத்து உள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெறுவது என்பதே மிக மிகக் கடினமான ஒன்றாகும்.