பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில், அதையும் தாண்டி சிஎஸ்கே அணி வேறு ஒரு பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற வேண்டும் என்ற திட்டத்தை சிஎஸ்கே அணி கையில் எடுத்துள்ளது. அதற்கு காரணம், மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆட வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி பின்னர் இரண்டாவது தகுதிப் போட்டியில் விளையாடி வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

ஆனால், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றால் முதல் தகுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறலாம். ஒருவேளை முதல் தகுதி போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது தகுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம். எனவே புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற வேண்டும் என சிஎஸ்கே அணி கடும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ஆனால், இதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். அடுத்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். இந்த மூன்றும் நடந்தால் ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கும். சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணியை விட கூடுதல் நெட் ரன் ரேட் பெற்று இரண்டாவது இடத்துக்கு செல்லும்.
ஒருவேளை சிஎஸ்கே அணி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்களுக்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் அல்லது கடைசி ஓவர் வரை சேஸிங் செய்து தோற்றால் 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.