Devon Conway : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரருமான கான்வே காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இந்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் கான்வே. டுபிளசிஸ் ஆர்சிபி அணிக்கு சென்ற பிறகு அந்த பாதிப்பை சிஎஸ்கே உணராமல் இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் கான்வே தான். தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தால் ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்து வருவார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூட அண்மையில்,ஐபிஎல் தொடரிலே தற்போது சிறந்த தொடக்க ஜோடி என்றால் அது கான்வே மற்றும் ருதுராஜ் தான் என்று பாராட்டி இருந்தார். அந்த வகையில் கான்வேவின் பங்கு மிகவும் முக்கியமாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கான்வே பதினாறு போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் அடித்தார். 140 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை நேற்றுதான் அறிவிக்கப்பட்டது. வரும் 22ஆம் தேதி சிஎஸ்கே அணி தன்னுடைய முதல் போட்டியில் ஆர்சிபி அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கான்வே விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து ஒன்று அவருடைய கையை கடுமையாக தாக்கியது. இதில் வலியால் துடித்த கான்வே போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.
கான்வேவுக்கு வலி அதிகமாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார்.இதனால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது கான்வே களத்திற்கு வரவில்லை. இதை பார்த்ததுமே சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் கான்வேவின் எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்று முடிவு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் கான்வேவை சோதனை செய்யும் மருத்துவக் குழு அவர் இந்த டி20 தொடரில் பங்கேற்பாரா இல்லை ஓய்வில் இருக்க வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கும். இன்னும் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் இருப்பதால் அதற்குள் கான்வே முழு உடல் தகுதி எட்டி விடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.