சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வங்கதேச வீரர் முஷ்டாஃபிகுர் ரஹ்மான், இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக களமிறங்கிய ஆர்சிபி அணி 2008ஆம் ஆண்டு வெற்றிபெற்றது. அதன்பின் 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணி ஒருமுறை கூட வென்றதில்லை. இதனால் முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வரலாற்றை மாற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியும் வீரர்களின் காயத்தால் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே இடதுகை பெரு விரவில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் 5 வாரங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்பதால், மே மாதத்தில் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நட்சத்திர பவுலரான பதிரனாவும் வலது தொடை பகுதியில் காயமடைந்துள்ளார்.
இந்த காயம் முழுமையாக குணமடைய 4 வாரங்களாகும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு நட்சத்திர வீரர்களின் இடத்தை சிஎஸ்கே அணி எப்படி நிரப்பும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பவுலிங் செய்த போது வங்கதேச வீரர் முஷ்டாஃபிகுர் ரஹ்மானுக்கு காயம் ஏற்பட்டது.
நடக்க முடியாத அளவிற்கு கால்களில் பிடிப்பு ஏற்பட, அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து பிசியோ-க்கள் அழைத்து சென்றனர். இது தாங்க முடியாமல் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் மைதானத்திலேயே கதறினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முஷ்டாஃபிகுர் ரஹ்மானும் காயமடைந்துள்ளதால், சிஎஸ்கே அணி மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பவுலர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.