சென்னை : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்ப்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பு ஒன்றை ஏற்று இருக்கிறார். தற்போது ஐபிஎல் ஏலம் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை புறநகரில் செயல்திறன் மையம் ஒன்றை திறக்க உள்ளது. அதன் தலைமை பொறுப்பை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கி உள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அங்குதான் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என கூறப்படுகிறது. அந்த மையத்தின் தலைமை பொறுப்பை அஸ்வின் ஏற்றுள்ளார்.
கிட்டத்தட்ட அங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்வது, என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் என முடிவு செய்யும் பொறுப்பை அளித்து இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். சிஎஸ்கே அணியின் கட்டுப்பாடு எப்படி தோனியிடம் இருக்கிறதோ, அதே போல இந்த மையத்தின் கட்டுப்பாடுகள் முழுவதும் அஸ்வின் வசம் இருக்கும்.
இதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்படுவார் என கூறப்படுகிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், "அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தின் தன்மையை பொறுத்து அன்று என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை நாங்கள் பார்ப்போம். இப்போது அவர் உயர் செயல் திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அதன் அனைத்து செயல்பாடுகளையும் அவரே கவனிப்பார். அவரை நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி ஆவார். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அணியான டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக விளையாடுவார்" என தெரிவித்தார்.
அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆடத் துவங்கிய காலத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து ஆடி வந்தார். அதன் பின்னரே அவர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். 2016 ஆம் ஆண்டு அவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் இருந்து விலகி அதன் போட்டி நிறுவனமான கெம்ப்லாஸ்ட்-இல் இணைந்தார்.
பின்னர் 2018-இல் அங்கிருந்து மாறி டேக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்தின் டிஎன்பிஎல் அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். தற்போது மீண்டும் தனக்கு முதல் வாய்ப்பு அளித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி இருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.