சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் முக்கிய சாதனை ஒன்றை முந்தி வரலாறு படைத்து இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 167 ரன்கள் சேர்த்தது.
அப்போது சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்தது ரவீந்திர ஜடேஜா தான். அவர் 26 பந்துகளின் 43 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார் ரவீந்திர ஜடேஜா. இதை அடுத்து போட்டி முடிந்தவுடன் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது சிஎஸ்கே அணிக்காக அவர் பெரும் 16வது ஆட்ட நாயகன் விருதாகும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. முன்னதாக தோனி 15 முறை சிஎஸ்கே அணிக்காக ஆட்டநாயகன் விருது வென்று இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தோனியின் அந்த நீண்ட நாள் சாதனையை முறியடித்து இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் தோனி 15 விருதுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா 12 விருதுகளுடன் மூன்றாவது இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 11 விருதுகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். மைக்கேல் ஹஸ்ஸி 10 ஆட்டநாயகன் விருதுகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 40 ரன்களுக்கு அதிகமாக ரன் சேர்த்து, மூன்று விக்கெட்களும் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தை ஷேன் வாட்சன் மற்றும் யுவராஜ் சிங்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த மூன்று வீரர்களும், மூன்று முறை 40+ ரன்கள் மற்றும் மூன்று விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.