மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் மாற்று துவக்க வீரராக இருந்தார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால்; தற்போது 2024 டி20 தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதே சமயம் ரோஹித் சர்மாவுடன் மற்றொரு துவக்கக் வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருக்கிறார். ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை என்றாலும் அவர் தனித்துவமான இடது கை அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

சுப்மன் கில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதாவது உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் தவிர்த்து இந்திய அணி நான்கு வீரர்களை மாற்று வீரர்களாக அறிவித்து இருக்கிறது. முதல் 15 வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் இந்த மாற்று வீரர்களில் இருந்து ஒருவரை இந்திய அணி தேர்வு செய்யும்.
அந்த வகையில் சுப்மன் கில்லுக்கு மாற்று வீரராக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் சுப்மன் கில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. ரன் சேர்க்கும் சில போட்டிகளிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே உள்ளது. ஆனால், ஒரு சதம், ஒருமுறை 98 ரன்கள் என பெரிதாக ரன் குவித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராகக் கூட இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட் முதுகில் கேப்டன் ரோஹித் சர்மா குத்தி விட்டதாகக் கூறி கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.