சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்கு பதிலாக அவினாஷ் என்ற ஹைதராபாத் விக்கெட் கீப்பரை ஏலத்தில் எடுத்திருக்கிறது. தோனி தனது கடைசி சீசனில் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். இதனால் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று இந்திய விக்கெட் கீப்பரை அணியில் எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் ஐபிஎல் ஏலம் இறுதிக் கட்டத்தை எட்டிய போது அவினாஷ் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அவினாஷ் பெயர் வந்தபோது யாருமே அவரை கேட்காத நிலையில் சிஎஸ்கே அவரை எடுத்தது. இது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.
இந்த நிலையில் யார் இந்த அவினாஷ் என்று தேடிப் பார்த்தபோது நமக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஏனென்றால் அவினாஷ் அப்படியே சுரேஷ் ரெய்னாவை ஜெராக்ஸ் எடுத்தது போல் விளையாடுகிறார். எப்படி நமது சுரேஷ் ரெய்னா இடது கை பேட்ஸ்மனாக பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து விரட்டுவாரோ அதனை கண் முன் காட்டுகிறார் இந்த அவினாஷ்.
அவினாஷ் ஹைதராபாத்தை சேர்ந்த விக்கெட் கீப்பராக இருக்கிறார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங் நன்றாக பாய்ந்து பந்தை தடுத்து பிடிக்கிறார்.ஹைதராபாத்தில் ஏற்கனவே திலக் வர்மாவை சிஎஸ்கேவும், மும்பையும் கண்டுபிடித்து ஏலத்தில் எடுக்க முயன்ற போது, மும்பை அணி அவரை தட்டி தூக்கியது.
இந்த நிலையில் அதே ஹைதராபாத்தில் இம்முறை அவிநாசை சிஎஸ்கே கண்டுபிடித்து அடிப்படை விலையான இருபது லட்சத்திற்கு தட்டி தூக்கி இருக்கிறது. அவிநாஸ் பேட்டிங்கை பார்த்தபோது சி எஸ் கே அணி நிர்வாகம் இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ரெய்னா போல் விளையாடும் இந்த வீரரை ஒரு முறையாவது விளையாட வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.