தரம்சாலா : தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான ஸ்கோர் எடுத்த போதும் அபாரமாக பந்து வீசி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான முஸ்தாபிசூர் ரஹ்மான், பதிரானா, தீபக் சாஹர் ஆகியோர் பல்வேறு காரணங்களால் இடம் பெறவில்லை. இதை அடுத்து இம்பாக்ட் வீரராக வேகப் பந்துவீச்சாளர் சிமர் ஜீத் சிங் களமிறக்கப்பட்டார். இவரை சிஎஸ்கே அணி களமிறக்க முக்கிய காரணமே இவரது வேகம் தான். இவரால் மிக எளிதாக 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசமுடியும். சில சமயம் 150 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசி எதிரணியை அச்சுறுத்தும் ஆற்றல் கொண்டவர்.

அவர் மிக துல்லியமாக பந்து வீசி 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணி புதிதாக வந்த இவரது பந்துவீச்சில் அதிரடியாக ரன் குவிக்கலாம் என நினைத்து ஏமாற்றம் அடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிமர்ஜீத் சிங் தனக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே முத்திரை பதித்து இருக்கிறார்.
இந்த போட்டியில் அவர் ஜிதேஷ் சர்மாவை முதல் பந்திலேயே டக் அவுட் செய்தார். அடுத்து பின்வரிசை வீரரான ஹர்ஷல் பட்டேல் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால், அந்த அணி பேட்டிங்கில் தடுமாறியது.
இது போன்ற குறைவான ஸ்கோர் எடுக்கப்படும் போட்டிகளில் புதிதாக வரும் பந்துவீச்சாளர்களை குறிவைத்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பார்கள். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியால் சிமர்ஜீத் சிங் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை. மேலும் விக்கெட்களையும் இழந்தது. முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத போதும் மிகச் சரியாக சிமர்ஜீத் சிங்கை தேர்வு செய்து களமிறக்கிய சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகளில் சிமர்ஜீத் சிங் சிஎஸ்கே அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.