சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை தழுவிய சி எஸ் கே அணி அந்தப் பயணத்தை முடிவுற்றிருக்கிறது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா கடுமையாக தடுமாறினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற்ற கே கே ஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோன்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜடேஜா அரை சதம் அடித்தார். கடந்த ஒன்பது போட்டிகளில் அவர் வெறும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இதைத் தவிர ஜடேஜா பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் ஜடேஜா இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பேட்டிங்கில் கீழ் வரிசையில் ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால் ஃபார்மில் இல்லாத ஜடேஜா என்ன செய்யப் போகிறார் என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் களமிறங்கிய ஜடேஜா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகள் என 26 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்கள் சேர்த்தார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஜடேஜா பந்து வீச்சிலும் பட்டையை கிளப்பினார். நான்கு ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜாவின் இந்த செயல்பாடு காரணமாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.ஜடேஜா தற்போது ஃபார்முக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கேக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது.