சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி தங்களுடைய ஐந்தாவது லீக் ஆட்டத்தில் வெற்றியை ருசித்து இருக்கிறது. இதன் மூலம் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணி சொந்த மண்ணிற்கு வந்த பிறகு வெற்றியைப் பெற்றிருக்கிறது.
சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் வென்றதற்கு முக்கிய காரணம் ஜடேஜா தான். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்த கே கே ஆர் அணி அபாரமாக விளையாடி பவர் பிளேவில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் பந்து வீச வந்த ஜடேஜா ஒரே ஓவரில் கேகேஆர் அணியின் முக்கிய இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முடிவாக 8 பந்துகள் இடைவெளியில் ஜடேஜா மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு தல ரெய்னாவுக்கு சின்ன தல என பெயர் வைத்திருப்பது போல் உங்களுக்கு ஏதேனும் பட்டம் ரசிகர்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜடேஜா, எனக்கு இதுவரை எந்த பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கவில்லை. விரைவில் எனக்கு ரசிகர்கள் வழங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றேன் எனக் கூறி சிரித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர் சென்னை ஆடுகளத்தில் பந்து வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதனை நான் மகிழ்ச்சியுடன் செய்வேன். பந்தை நன்றாக பிடிக்க முடியும் என்று நான் இன்று நம்பினேன். சென்னை ஆடுகளத்தை பொருத்தவரை நீங்கள் சரியான இடத்தில் பந்தை செலுத்தினால் நிச்சயம் உங்களுக்கு விக்கெட் கிடைக்கும். சேப்பாக்கம் மைதானத்தில் பந்து விளையாடும் அணிக்கு நிச்சயம் பிரச்சனை இருக்கின்றது.
ஏனென்றால் இந்த ஆடுகளத்தை கணிப்பது என்பது சிரமமாக இருக்கும். இங்கு வந்து விளையாடும் அணிக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் இடைவெளி இருக்கும். அந்த இரண்டு நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளத்தை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் திட்டத்தை வகுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் இதில் எங்களுடைய சொந்த மைதானம் என்பதால் இங்கு எப்படி விளையாடுவது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.