ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிதான். இருவரும் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி இருக்கிறது.
இதில் நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். ஐபிஎல் அணிகளுக்கு பொதுவாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைக்கும்.

இதற்காகத்தான் ஒவ்வொரு அணியின் ஜெர்சியிலும் பல நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அணிக்கு கிடைக்கும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர் மோயின் அலி மற்றும் வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மான் ஆகியோர் மது விளம்பரங்களுக்கு நோ சொன்ன விஷயம் சிஎஸ்கேவுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமிய மதத்தில் மது அனுமதிக்கப்படாத விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் மதுமூலம் வரும் வருமானமும் இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே மோயின் அலி, சிஎஸ்கே அணி ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும் மது நிறுவனம் பெயரை தன்னுடைய ஜெர்சியில் இடம்பெறக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்தப் பட்டியலில் வங்கதேச வீரர் ரஹ்மானும் இணைந்து இருக்கிறார். தற்போது பதிராணா காயமடைந்திருக்கும் நிலையில் முஸ்தஃபீசூர் ரஹ்மான்தான் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவானார்.இந்த நிலையில் முஸ்தஃபீசுர் ரஹ்மானும் மது விளம்பரத்திற்கு நோ என்று கூறி இருப்பது சிஎஸ்கேவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே மோயின் அலி விஷயத்தில் சிஎஸ்கே ஓகே சொன்ன நிலையில் இரண்டாவதாக முஸ்தஃபீசூர் ரஹ்மானும் நோ சொல்லியிருப்பது அந்த அணிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. இதை சமாளிக்க இரண்டு வீரர்களுக்கும் வழங்கப்படும் ஊதியம் குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. நமது நாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பான் பராக் போன்ற விளம்பரங்களில் நடித்து வரும் நிலையில், இவ்விரு கிரிக்கெட் வீரர்களும் மது விளம்பரத்திற்கு நோ என்று கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.