சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி, ஆர்சிபி கே எதிரான முதல் லீக் போட்டியில் அதிரடியாக விளையாடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. சிஎஸ்கேவை பொறுத்தவரை எப்போதுமே பவர் பிளேவில் அதிரடியாக ஆடிவிட்டு பவர்பிளே முடிந்ததும் தங்களுடைய ரன்களை அடிக்கும் வேகத்தை குறைத்துக் கொள்வார்கள்.

நடு ஓவர்களில் கொஞ்சம் பொறுமை காத்து விட்டு அதன் பிறகு இறுதியில் விக்கெட்டுகளை கைவசம் வைத்துக்கொண்டு அதிரடி காட்டுவார்கள்.இதுதான் தோனியின் ஸ்டைலாக இருக்கும். ஆனால் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தது, ரசிகர்களுடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பவர் பிளேவில் சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி ஆறு ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது கேப்டன் ருதுராஜ் மூன்று பவுண்டரிகளை விளாசி 15 ரன்களில் வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்த பிறகு ரகானே ரச்சின் ரவிந்திரா ஜோடி இணைந்து அதிரடியை காட்டியது. குறிப்பாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த ரகானே சிஎஸ்கேவுக்கு வந்தவுடன் மட்டும் அதிரடி வீரராக மாறிவிடுகிறார்.
ரகானே இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்திய நிலையில் மூன்றாவது சிக்ஸரை அடிக்க முற்பட்டு 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.ரகானே அதிரடியாக ஆடுவது நல்ல விஷயமாக இருந்தாலும், கொஞ்சம் அவர் பொறுமை காத்திருந்தால் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்க தேவையில்லை. இதேபோன்று தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார்.
இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ரவீந்திராவும் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்க நேரிட்டிருக்காது. மற்றொரு நியூஸிலாந்து வீரருமான டேரல் மிட்செல் சிஎஸ்கேவுக்கு அறிமுக போட்டியில் களமிறங்கி அதிரடியை காட்டி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தார்.
இந்த வீரர்கள் அதிரடியாக விளையாடியதன் மூலம் கைவசம் இருக்கும் பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்கும் இடைவெளி குறைவாக இருந்தது. எனினும் இந்த வீரர்கள் கொஞ்சம் பொறுமை காத்து இருந்தால் கடைசி வரை நின்று போட்டியை முடித்து இருப்பார்கள். இதனால் சிஎஸ்கே அணி புதிய யுத்தியை ருதுராஜ் தலைமையில் கடைப்பிடிக்கிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.