அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை, குஜராத் அணியின் சுப்மன் கில் - சாய் சுதர்ஷன் ஜோடி விளாசி ரன் குவித்ததை கண்டு சிறுவன் ஒருவன் கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் பரவியது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். அவர்களின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். ஒரு விக்கெட்டாவது விழாதா? தான் என சிஎஸ்கே ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.

அப்போது சிஎஸ்கே உடை அணிந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுத காட்சி நேரலையில் காட்டப்பட்டது. அந்த காட்சி உடனடியாக சமூக வலை தளங்களில் பரவியது. அந்த சிறுவன் சிஎஸ்கே அணியை, சுப்மன் கில் - சாய் சுதர்ஷன் ஜோடி புரட்டி எடுப்பதை அறிந்தே அழுவதாக கூறப்பட்ட நிலையில், மற்ற சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அந்த காட்சி நெகிழ வைப்பதாக இருந்தது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 231 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் எடுத்தனர். அடுத்த ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில் டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயீன் அலி 56 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். ரஹானே 1, ரச்சின் ரவீந்திரா 1, ருதுராஜ் கெய்க்வாட் 0 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். அது மட்டுமே சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.