சென்னை : குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் பதிரனா, தோனி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதாக சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சிவம் துபே 51 ரன்கள் சேர்த்து அசத்தினார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.

சிஎஸ்கே அணி தரப்பில் தீபக் சஹர், முஷ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் விஜய் சங்கர் கொடுத்த கேட்சை 42 வயதிலும் சிறுத்தை போல் பாய்ந்து தோனி பிடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் தோனியை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீதும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் 18 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டே ருதுராஜ் கெய்க்வாட் வீச வைத்து வெற்றிபெற்றுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முஷ்தாஃபிசுர் மற்றும் பதிரனா இருவரையும் விளையாட வைத்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

ஏனென்றால் காயம் காரணமாக இளம் நட்சத்திர வீரர் பதிரனா, முதல் போட்டி முடிவடைந்த அடுத்த நாள் தான் சிஎஸ்கே அணியுடன் இணைந்தார். இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலேயே பதிரனா களமிறக்கப்பட்ட நிலையில், 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பவுலிங் செய்வதற்காக மைதானத்திற்குள் களமிறங்கிய போது, இளம் வீரர் பதிரனா தோனியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதாக சோசியல் மீடியாவில் சில வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது பவுலிங் செய்வதற்காக மார்க்கரை எடுக்கவே தோனிக்கு அருகில் குனிந்து பதிரனா எடுத்தார். அந்த வீடியோவின் இடையே கேமரா நடுவில் சென்றதால், ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.