சென்னை : குஜராத் அணியின் விஜய் சங்கர் கொடுத்த கேட்சை 1 நொடிக்குள் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி பாய்ந்து பிடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சிவம் துபே 51 ரன்களும், ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலா 46 ரன்களும் விளாசினர்.

இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணியின் தீபக் சஹர், முஷ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் காரணமாக சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் களமிறங்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் ஃபீல்டிங்கில் தோனி செய்த சாகசங்களால் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் டேரல் மிட்சல் வீசிய பந்தில் விஜய் சங்கர் அடித்த பந்து எட்ஜாகி தோனிக்கு அருகில் பறந்தது.
அதனை சிறுத்தை போல் தோனி பாய்ந்து இரு கைகளாலும் கேட்ச் பிடித்து அசத்தினார். விஜய் சங்கர் பேட்டில் அடித்த பந்தை 0.60 நொடியில் தோனி கேட்ச் பிடித்துள்ளார். அந்த 0.60 நொடியில் தோனி சரியாக 2.27 மீட்டர் தூரம் பாய்ந்து டைவ் அடித்து அசத்தியுள்ளார் தோனி. 42 வயதிலும் தோனி கில்லியாக செயல்படுவது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இந்திய ஒருநாள் அணியில் இருந்து கங்குலி, லக்ஷ்மண் ஆகியோரை நீக்குவதற்கு தோனி அவர்களின் ஃபீல்டிங்கை தான் முதன்மை காரணமாக கூறினார். கடந்த சீசனில் கூட சிவம் துபே ஒரு கேட்சை கோட்டைவிட்டதும் உடனடியாக அவரை வெளியில் அவர வைப்பார். அப்படிப்பட்ட தோனி இப்படியான ஃபீல்டிங்கை 42 வயதிலும் செய்வது தான் அவரின் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது.