சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் தற்போது மீண்டும் பல பரிட்சை நடத்துகின்றன.
இரண்டு அணிகளுமே தங்களுடைய கேப்டன்களை மாற்றி இருக்கிறது. இருவருமே புதுமுகம் என்பதால், அனைவரின் எதிர்பார்ப்பும் இன்றைய போட்டியின் மீது இருக்கிறது. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் குஜராத் அணியை சிஎஸ்கே வை சந்திக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஆர் சி பி ஐ, எளிதாக வீழ்த்தி தற்போது இரண்டாவது வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா ஐந்து முறை இதுவரை ஐபிஎல் தொடரில் மோதி இருக்கிறார்கள். இதில் குஜராத் அணி மூன்று முறையும் சிஎஸ்கே அணி இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக முதல் போட்டியில் களமிறங்காத பதிராணா தற்போது முழு உடல் தகுதியை பெற்று இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இதனால் அவர் அணிக்கு திரும்பினால் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பம் ஏற்படும். காரணம் முஸ்தஃபீசூர் ரஹ்மான் முதல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதேபோன்று குஜராத் அணியில் நான்கு தமிழக வீரர்கள் மற்றும் தமிழக ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ள ஒரு கேரள வீரரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து வீரர்களுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது நன்கு தெரியும்.இது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
சாய் சுதர்சன், ஷாருக்கான் விஜய் சங்கர், சாய் கிஷோர், சந்தீப் வாரியார் போன்ற வீரர்கள் சென்னை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் நிச்சயம் குஜராத் அணிக்கு கை கொடுக்கும். இதனால் குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் குஜராத் அணியில் உள்ள மோகித் சர்மா முன்னாள் சிஎஸ்கே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சு மிகவும் குறையாக பார்க்கப்படுகிறது.துஷர் தேஷ் பாண்டே ரன்களை முதல் போட்டியில் வாரி வழங்கினார். இதனால் அவரை தோனி சேர்ப்பாரா இல்லை சர்துல் தாக்கூரை அணியில் சேர்ப்பதா? என்ற விவாதம் எழுந்துள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.