சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருக்கும் ரஹானே மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சீசனில் ரகானே அபாரமாக விளையாடி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனால் ரகானே தற்போது தொடர்ந்து பார்ம் அவுட் ஆகி இருக்கிறார். 35 வயதான ரகானே ஏற்கனவே இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டிலும் அவர் தடுமாறினார்.

இந்த நிலையில் சிஎஸ்கேவில் மீண்டும் இடம்பிடித்து தன்னுடைய பார்மை ரகானே மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏழு போட்டிகள் விளையாடி இருக்கும் ரஹானே ஒரு முறை கூட 50 ரன்களை தொடவில்லை. சில போட்டிகளில் அவர் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் தடுமாறி வருகிறார்.
இதுவரை rcb-க்கு எதிராக 27 ரன்கள், குஜராத்துக்கு எதிராக 12 ரன்கள், டெல்லிக்கு எதிராக 45 ரன்கள், சன்ரைசர்ஸ் எதிராக 35 ரன்கள், மும்பைக்கு எதிராக ஐந்து ரன்கள், லக்னோக்கு எதிராக 36 ரன்கள் எடுத்து இருந்த ரகானே இன்று ஆட்டத்தில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். ரஹானேவுக்கு லேசான காயம் இருக்கிறது. இதனால் தான் அவர் தொடக்க வீரராக களம் இறங்குகிறார் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸி கூறியிருந்தார்.
இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் கடுப்பாகினர். ரஹானேவுக்கு லேசான காயம் இருந்தால் அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கிறீர்கள். அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே என்று கேள்வி கேட்டுள்ளனர். ரஹானே உடல் தகுதி 100% நிரூபிக்கப்பட்டதாக அந்த பேட்டியில் ஹசி கூறி இருந்தார்.இதனால் மீண்டும் நடுவரிசையில் விளையாடுவார் என்றும் அவர் சொல்லியிருந்தார்.
எனினும் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்காமல் வெளியேறிவிட்டார். இதனால் ரஹானே அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக வேறு இளம் வீரர்களையாவது இல்லை வெளிநாட்டு வீரர்களாவது கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கி தடுமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.