மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக களம் இறங்கிய டேரல் மிட்செல் தற்போது பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ராயுடு ஓய்வு பெற்றார்.
இதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி 14 கோடி ரூபாய் கொடுத்து டேரல் மிட்செலை வாங்கியது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பட்டையை கிளப்பிய டேரல் மிட்செல் சுழற் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்டார்.

ஆனால் நடப்பு தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள டேரல் மிட்செல் வெறும் 135 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்திருக்கிறார். மிட்செலின் செயல்பாடு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி டேரல் மிட்செலை அழைத்து சில பேட்டிங் அறிவுரைகளை வழங்கினார்.
களத்தில் அமைதியாக இருந்து பந்தை எதிர்கொள்ள சில அறிவுரைகளை தோனி வழங்கினார். இந்த நிலையில் டேரல் மிட்செல் மீது நம்பிக்கை இருப்பதால்தான் தோனி அவருக்கு அறிவுரை வழங்கியிருப்பதாகவும், வெள்ளிக்கிழமை லக்னோ எதிரான போட்டியில் டேரல் மிட்செல் கண்டிப்பாக இடம் பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் லக்னோக்கு எதிரான போட்டியை டாரல் மிட்செலுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு என தெரிகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே வாய்ப்புக்காக மோயின் அலி, மிட்செல் சாண்ட்னர் போன்ற ஆல்ரவுண்ட் சுழற் பந்து வீச்சாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் டேரல் மிட்செல் மீண்டும் சொதப்பினால் மோயின் அலி பிளேயிங் லெவனுக்குள் வந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சும் என இரண்டிலுமே ஈடுபட வாய்ப்பு உள்ளது.
எனினும் சிஎஸ்கே எப்போதுமே தடுமாறும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது வழக்கம். ஆனால் இம்முறை டேரல் மிட்செல் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு இதுதான் கடைசி ஆட்டமாக இருக்கும் என தெரிகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினால் அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இருக்கலாம். இல்லையெனில் மோயின் அலி அந்த இடத்திற்கு வரக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.