சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே, லக்னோ அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ்க்கு டாசில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்லை.
தற்போது ஏழாவது முறையாக டாசை இழந்திருக்கும் ருதுராஜ், லக்னோ அணியால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லக்னோ கேப்டன் கே எல் ராகுல் சென்னையில் பயிற்சி செய்தபோது கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருந்ததாக கூறினார்.

இதனால் தாங்கள் முதலில் பந்து வீச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், இந்த தொடரில் தமக்கு டாசில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்லை என்றும் ஏழு முறை டாசை இழந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.
எனினும் சென்னை ஆடுகளத்தை கணிக்கவே முடியாது என்பதால் களத்தில் சென்று திறமையை வெளிப்படுத்துவதே ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணியில் சில மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரச்சின் ரவீந்திரா கடந்த சில போட்டிகளாக தடுமாறி வருவதால் அவருக்கு பதிலாக டேரல் மிச்செல் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் ரகானே உடன் தொடக்க வீரராக ருதுராஜ் விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்று கிரிக்கெட் வர்ணனையாளர் கேள்வி கேட்க, அதற்கு அவர் சிரிப்பால் பதில் சொன்னார். இதனால் சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் டேரல் மிட்செல், மோயின் அலி, முஸ்தபிசுர் ரஹ்மான், பதிரானா என நான்கு வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாட உள்ளது.
லக்னோ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரச்சின் ரவீந்தராவுக்கு பதில் டாரல் மிட்செல் விளையாட இருப்பதால் அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறார் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்வதால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.