சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ரகானே, டேரல் மிட்செல், ஜடேஜா போன்ற வீரர்கள் எல்லாம் தடுமாறினர்.
ஆனால் தனி ஆளாக நின்று சிவம் துபே உடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் அபாரமாக விளையாடி 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.

இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த சிஎஸ்கே கேப்டன் தோனியின் சாதனையை ருதுராஜ் முறியடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒவ்வொரு அணியின் கேப்டனும் எடுத்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருந்தபோது ஆர்சிபி அணிக்கு எதிராக அவர் 132 ரன்கள் குவித்தார். இதைப் போன்று சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், கே கே ஆர் அணிக்காக 126 ரன்கள் குவித்தார். இதேபோன்று டெல்லி அணியின் கேப்டனாக இருந்த சேவாக் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 119 ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிராக 119 ரன்கள் குவித்திருக்கிறார். ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 113 ரன்களும், மீண்டும் விராட் கோலி குஜராத் அணிக்கு எதிராக 109 ரன்களும், புனே அணிக்கு எதிராக ஆர் சி பியின் கேப்டனாக கோலி 108 ரன்களும் குவித்திருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் 108 ரன்கள் குவித்து இருப்பது அதிகபட்ச ஸ்கோர் ஆக கருதப்படுகிறது. இதே போன்று சிஎஸ்கே வரலாற்றில் கேப்டனாக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமை ருதுராஜுக்கு கிடைத்திருக்கிறது. அதிக சதம் அடித்த கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி ஐந்து சதத்துடன் முதல் இடத்திலும்,கே.எல். ராகுல் மூன்று சதத்துடன் இரண்டாவது இடத்திலும், சச்சின், சேவாக், கில்கிறிஸ்ட், வார்னர், சஞ்சு சாம்சன், ருதுராஜ் ஒரு சதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.