தர்மசாலா : ஐபிஎல் தொடரின் 2024 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டேரல் மிட்செல் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணி அவரை 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இந்த தொகைக்கு ஏற்ற வகையில் அவர் விளையாடினாரா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதுதான் சரியாக இருக்கும்.
நடப்பு சீசனில் டேரல் மிட்செல் தொடர்ந்து ஒரே ஒரு முறை தான் அரை சதம் எடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்து டேரல் மிட்செல் ஃபார்முக்கு வந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் பேட்டிங் செய்ய பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டேரல் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். குறிப்பாக ரகானே ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஃபெவிலியன் திரும்பிய நிலையில் பவர் பிளேவில் ரன் அடிக்க வேண்டும் என்று நெருக்கடியில் டேரல் மிட்செல் களம் இறங்கினார்.
கேப்டன் ருதுராஜ் கொஞ்சம் தடுமாறிய நிலையில் முதல் பந்தில் இருந்து மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். தன்னுடைய பழைய ஸ்டைலுக்கு அவர் திரும்புகிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விரட்டிய டேரல் மிட்செல் 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதனால் டேரல் மிட்செல் பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் ஹர்சல் பட்டேல் வீசிய பந்தை அவர் அடிக்கத் தவறியதால், அது அவருடைய காலில் பட்டது. இதற்கு பஞ்சாப் வீரர்கள் அவுட் கேட்க கள நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். எனினும் டேரல் மிட்செல் இதற்கு டிஆர்எஸ் முடிவை கேட்டார். அப்போது ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்து லேசாக ஸ்ட்ம்பை உரசி சென்றிருக்கிறது.
அப்படி இருந்தால் இது நாட் அவுட் என்று தான் பொருள். ஆனால் ஸ்டெம்பில் பந்து லேசாக உரசி சென்றால், கள நடுவர் என்ன சொல்கிறாரோ, அதுதான் இறுதி முடிவு என்ற ஒரு விதி இருக்கிறது. இதற்கு கள நடுவர் தவறாக அவுட் என்று அறிவித்துவிட்டார். இதனால் டி ஆர்எஸ்ஸில் உறுதியாக அவுட் இல்லை என்று தெரியாத நிலையிலும், இதற்கு அவுட் என நடுவர்கள் அறிவித்து விட்டார்கள்.
டி ஆர் எஸ் தொழில்நுட்பம் இருந்தும் நடுவர்களின் முடிவை ஏன் இறுதி முடிவாக அறிவிக்கிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு மட்டும் கள நடுவர் சரியாக நாட் அவுட் என அறிவித்திருந்தால், இது நாட் அவுட் ஆகி இருக்கும். டேரல் மிட்செல் தற்போது தான் ஃபார்முக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் 30 ரன்களில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போது வெளியேறி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.