மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ஒரு காலத்தில் விளங்கிய தீபக்சாகர் தற்போது தொடர்ந்து காயமடைந்து வருவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.
சிஎஸ்கே அணிக்காக 2018 ஆம் ஆண்டு சீசனலிருந்து தீபக்சாகர் விளையாடி வருகிறார். சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்ல தீபக்சாகர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும், 2019 ஆம் ஆண்டு 17 போட்டிகள் விளையாடி தீபக்சாகர் 22 விக்கெட்டுகளையும், 2020 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும், 2021ஆம் ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளையும் தீபக்சாகர் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் அதன் பிறகு தீபக்சாகருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அவரால் ஒரு சீசன் கூட முழுமையாக விளையாட முடியவில்லை. 2022 ஆம் ஆண்டு தீபக்சாகரை சிஎஸ்கே வெகுவாக நம்பி இருந்த நிலையில்,அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இதை அடுத்து 2023 ஆம் ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய தீபக் சாகர் பத்து போட்டியில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
எனினும் தீபக் சாகர் நீண்ட நாட்களாக அணியில் இருக்கிறார் என்பதால் அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் செல்லம் கொடுத்து வருகிறது. ஆனால் தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை தீபக் சாகர் வீணடிக்கிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடப்பு சீசனில் ஏற்கனவே ஒரு முறை காயம் ஏற்பட்டு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த தீபக்சாகர் இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் இரண்டு பந்துகளை வீசிய நிலையில் காயம் ஏற்பட்டதாக கூறி போட்டியிலிருந்து வெளியேறினார்.
தீபக்சாகர் நடப்பு சீசனில் வெறும் எட்டு போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு தீபக் சாகரை பெரும் தொகை கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் அவர் வெறும் 18 போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். இப்படி அடிக்கடி காயம் ஏற்படும் ஒரு வீரரை நம்பி அணியை கட்டமைப்பது என்பது மிகவும் மோசமான காரியம். இதனால் தீபக் சாகருக்கு ஒரு கும்புடு போட்டு அவரை அணியை விட்டு அனுப்புவது தான் சரி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.