சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி நடப்பு சீசனில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.
11 போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாடி உள்ள நிலையில் தோனி மொத்தமாகவே இரண்டு முறை தான் ஆட்டமிழந்திருக்கிறார். ஆனால் தோனி இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கடைசி கட்டத்தில் தான் களம் இறங்கி வருகிறார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவர் பேட்டிங் செய்ய வராமல் ஷர்துல் தாக்கூரை களமிறக்கி கொண்டு ஒன்பதாவது வீரராக தான் பேட்டிங் செய்ய வந்தார். இதனால் தோனிக்கு ஏதேனும் காயம் இருக்கிறதா? இல்லை வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி அதிரடியாக ஆடி ஒரு 20 ரன்கள் சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தோனி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. எனினும் பேட்டிங்கில் தடுமாறினாலும் தோனி விக்கெட் கீப்பிங்கில் அபாரமாக செயல்பட்டார்.
குறிப்பாக சிஎஸ்கே வீரர் சிம்மர்ஜித் சிங் வீசிய வந்து ஆஸ்ட்டோஷ் சர்மா ஒரு ஷாட் ஆட அது விக்கெட் கீப்பர் பக்கம் பறந்து சென்றது. அப்போது தோனி பாய்ந்து கேட்ச்சை பிடித்து அசத்தினார். இதன் மூலம் தோனி ஐபிஎல் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.
இதில் 146 கேட்ச் விக்கெட் கீப்பர் ஆகவும் நான்கு கேட்ச்கள் வெறும் பீல்டராகவும் தோனி பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தோனி நேற்று பேட்டியில் தடுமாறினாலும் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடருடன் தோனி விலகுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இன்னும் நான்கு போட்டிகளில் தான் தோனி விளையாடப் போகிறார் என்று சோகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.