சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஆரம்பமே சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தாலே பாதி வெற்றியை உறுதி செய்யலாம் என்ற நிலை இருந்தது. இரண்டாவது பந்து வீசும் போது ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. போட்டியிலும் அதே தான் நடந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அப்போதே சிஎஸ்கே அணிக்கு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய அழுத்தம் இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் பந்துவீச்சில் தடுமாறி 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது. இது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முதல் காரணம் ஆகும்.
ரஹானே ஆட்டமிழந்த பின் டேரில் மிட்செல் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால், சுழற் பந்துவீச்சாளர்களை சமாளிக்க சிவம் துபே மூன்றாம் வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அது பேட்டிங் வரிசையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த ஜடேஜாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்த பின் சமீர் ரிஸ்வி களமிறங்கினார். இது சிஎஸ்கே அணியின் தோல்விக்கு இரண்டாவது காரணம் ஆகும்.
அதன் பின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - சமீர் ரிஸ்வி பேட்டிங் செய்த போது பவுண்டரி அடிக்க முயற்சி செய்யவில்லை. 7வது ஓவர் முதல் 15 வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதன் பின் சிஎஸ்கே அணி பவுண்டரி அடித்தாலும் 20 ஓவர்களில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 200 ரன்கள் எடுக்க வேண்டிய போட்டியில் 162 ரன்கள் மட்டுமே எடுக்க காரணம் மிடில் ஓவர்களில் பவுண்டரி அடிக்காமல் இருந்தது தான். இது தோல்விக்கான மூன்றாவது காரணம் ஆகும்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அந்த இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்களால் தான் கடந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருந்தது. அவர்கள் இல்லாத நிலையில் மற்றொரு சிறந்த வேகப் பந்துவீச்சாளரான தீபக் சாஹர் வெறும் நான்கு பந்துகளை வீசிய பின் காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஆடுகளத்தை விட்டு விலகினார். இது சிஎஸ்கேவின் தோல்விக்கு நான்காவது காரணம் ஆகும்.
இதை அடுத்து பந்துவீச்சில் பலமின்றி ஆடிய சிஎஸ்கே அணி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மீண்டும் நான்கு நாட்கள் கழித்து பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே அணி மோத உள்ளது. அதற்குள் பந்துவீச்சாளர்கள் அணிக்கு திரும்பினால் மட்டுமே சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும்.