சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் தனது பத்தாவது லீக் போட்டியில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான மதீஷா பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டியிலும் இவர்கள் இருவரும் பங்கேற்பார்களா? என்பது தெரியாத நிலை உள்ளது.

மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் முஸ்தாபிசூர் ரஹ்மான் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருக்கிறார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத சிஎஸ்கே அணி, அடுத்த போட்டியில் இன்னும் மோசமான நிலைக்கு செல்லக் கூடும். மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அடுத்த போட்டியில் ஆடும் நிலை வரக் கூடும்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர், ரிச்சர்ட் கிலீசன் இடம் பெற்றனர். ரிச்சர்ட் கிலீசனுக்கு இதுவே ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டி ஆகும். 36 வயதில் ரிச்சர்ட் கிலீசன் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார்.
கடந்த 2014 முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான வீரர்களில் ரிச்சர்ட் கிலீசன் மிக வயதான வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார். இவரது பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவவில்லை என்றால் நிச்சயம் சிக்கலாகி விடும். இனி வரும் போட்டிகளில் குறைந்தது நான்கு போட்டிகளில் வென்றால் உறுதியாக பிளே - ஆஃப் செல்ல முடியும் என்பதால் சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்களை சரியாக கையாள வேண்டும்.