சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில், தோனி தங்களை மகிழ்விப்பதற்காக தனது வலியை பொறுத்துக் கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் சிஎஸ்கே ரசிகர்கள். 2023 ஐபிஎல் தொடரின் முடிவில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் ஓய்வில் இருந்த அவர், 2024 ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பு தான் பயிற்சிகளை தொடங்கினார்.

அவர் சிஎஸ்கே அணிக்காக போட்டிகளில் விளையாடினாலும் அவருக்கு முழங்காலில் வலி இருந்ததோடு, தொடரின் இடையே முதுகிலும் வலி ஏற்பட்டது. எனினும், அதற்கான தற்காலிக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு போட்டிகளில் பங்கேற்றார். தான் பேட்டிங் செய்ய வருவதை பார்ப்பதற்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்திற்கு வருகின்றனர் என்பதை உணர்ந்து, தோனி தனது வலியை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து 14 போட்டிகளிலும் விளையாடினார்.
அவர் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்த போதும் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். 14 போட்டிகளில் 73 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதில் 13 சிக்ஸர்களை அடித்து இருந்தார். 73 பந்துகளில் 161 ரன்கள் குவித்த தோனி, எட்டு முறை நாட் அவுட்டாக இருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இரண்டாவது தகுதிப் போட்டி அல்லது இறுதி போட்டியில் விளையாடும் எனவும், தோனி தனது கடைசி போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தோனியும் அதே ஆவலுடன் இருந்தார். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தோனிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.