டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லக்னோ அணியின் தோல்வியால் சிஎஸ்கே அணியின் பிளே - ஆஃப் வாய்ப்பு எளிதாக மாறி உள்ளது.
கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட பிளே ஆஃப் முன்னேறி விடும். இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நான்காவது இடத்தை பிடிக்க கடும் போட்டி இருந்தது.

இந்த நிலையில் டெல்லி அணி, லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளின் பிளே ஆப் வாய்ப்பும் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது டெல்லி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.377 ஆக உள்ளது. அந்த அணிக்கு இனி லீக் போட்டிகள் இல்லை. இனி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் கடைசி போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே டெல்லி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். அது நடக்க சாத்தியமில்லை.
அதே சமயம் லக்னோ அணி 12 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட நெட் ரன் ரேட் -0.787 என்ற அளவில் மிக மோசமாக இருப்பதால் அந்த அணியால் 14 புள்ளிகள் பெற்றாலும், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் நெட் ரன் ரேட்டை முந்த முடியாது.
சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே-வின் நெட் ரன் ரேட் +0.528 ஆக உள்ளது. சிஎஸ்கே - ஆர்சிபி மோத உள்ள போட்டியில் ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது சேஸிங் செய்தால் 18.1 ஓவரில் சேஸிங் செய்து முடிக்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே ஆர்சிபி 14 புள்ளிகளை பெற்று சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை முந்த முடியும். சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் கூட 18 ரன்களை விட குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும் அல்லது கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும். இது ஓரளவு எளிதான காரியம் என்பதால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.